Friday, October 29, 2010

மன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்

இது மன்னார்குடி டேஸுக்கே இறுதி ஆட்டம் போலருக்கே என்று "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்" பாடல் பாடி துள்ளி வரும் என் அருமை ப்ளாக் மக்களே நிற்க. அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுக்கு விடுதலை கிடையாது. இங்கேயே எண்ணெய் சட்டியாம். வறுத்துவிட்டுதான் மேலே அனுப்புவேன்.

இதுவும் விளையாட்டில் நிகழ்ந்த சம்பவம்தான்.. ஆனால் மாநில அளவிலான போட்டியில் நிகழ்ந்ததல்ல.. எங்கள் ஊர் அருகில் நடந்த மாவட்ட அளவிலான ஒரு கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்தது.. அவ்வளவு சுவாரசியமானதுமல்ல..

என்னடா இது சேப்புல ஆரம்பிக்குது. இது நான் எழுதியது அல்ல. இப்படி சுவாரசியமானது அல்ல என்று சுவாரஸ்யமாக ஆரம்பித்திருப்பவர் மன்னையில் எங்கள் தெரு அஷ்டாவதானி. நகைச்சுவை அரசர் என்று என்பத்தி ஒன்பதாவது ஃபாலோயராக என்னுடன் இந்த வலைப்பூவில் சேர்ந்திருக்கிறார். இவரைப் பற்றி நிச்சயம் மன்னார்குடி டேஸில் எழுதுவதற்காக வைத்திருந்தேன். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று அனைத்தையும் பிரித்து மேய்ந்து தெரு நாடகம் போட்டவர். ஊரில் அடிக்காத லூட்டி இல்லை. ஒரு லாங் சைஸ் வரி போட்ட நோட்டில் வசனம் எழுதி எங்களை மேடையில் பேசப் பழக்கியவர். ரெண்டு மூனு டிராமா போட்டதாக ஞாபகம். நீங்கள் இப்போது துன்புறுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். எங்களுக்கு கலையார்வத்தை கன்னாபின்னா என்று தூண்டி விட்டவர். அண்ணனே வந்து வசமா மாட்டிக்கிட்டார். அண்ணன் "பதிந்தால் தான் பார்க்கலாம்" (Registration is needed) என்றிருக்கும் முத்தமிழ்மன்றம் என்கிற வலை மன்றத்தில் (Forum) "வெங்கிட்டு" ஆகிய நான் இணைந்த கரைகளுக்கு அப்புறம் விளையாடிய தொடர்போட்டி ஒன்றை பற்றி எழுதியிருக்கிறார். அவரது கைவண்ணத்தில் அப்படியே தருகிறேன். டைட்டில்ல ஒரு கிரிக்கெட் படம்.

அது ஒரு தொடரின் இறுதிப்போட்டி..

டாப் ஹாஃபில் இருந்து நாங்கள் முறைப்படி வென்று இறுதிப்போட்டிக்கு வந்திருந்தோம்.. பாட்டம் ஹாஃபில் இருந்து போட்டியை நடத்தும் அணி போங்கு அடித்து இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது.. எங்களை வெல்லவல்ல அணிகளையெல்லாம் "தோற்கடித்து" முன்னேறியிருந்தனர். முதல் பரிசு ரூ. 3333. 2ம் பரிசு ரூ.2222.

போட்டி தொடங்கும்போதே மற்ற அணியினர் ( 3வது, 4வது இடம் பிடித்திருந்தவர்கள்) எங்களை எச்சரித்திருந்தார்கள்.. "உங்களுக்கு 2ம் பிரைஸ் தாம்ப்பா.. இது அவனுக ஊரு.. அம்பயரும் அவனுக ஆளுக..ஒண்ணும் பிரச்சனை பண்ணாம நீட்டா ஆடிட்டு கொடுக்கறத வாங்கிட்டு வந்து சேருங்க..!"

அம்பயரிங் அவர்கள் சொன்னது போலதான் இருந்தது.. டாஸ் வென்று எங்களை பேட் செய்யச் சொன்னார்கள். அவர்கள் போட்ட பந்துகள் எதுவும் பேட்டிங் கிரீஸ்க்குள்ளேயே வரவில்லை.. அம்பயர்கள் "வைட்" கொடுக்கவேயில்லை.. எங்கள் பேட்ஸ்மன்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துப்போய் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டியிருந்தது. கனெக்ட் ஆனால் ரன்.. இல்லையென்றால் கீப்பர் அவுட் கேட்பார்... காத்திருந்தவர்போல அம்பயர் கையைத் தூக்கி அவுட் கொடுப்பார். அதுமட்டுமல்ல.. அப்படி விலகிச்செல்லும் பந்துகளை காலில் வாங்கினால் எல்பிடபிள்யூ கொடுக்கும் கொடுமையும் நிகழ்ந்தது. நான் ரன் அவுட்.. பந்தை கீப்பர் வாங்கி ஸ்டம்பில் அடிப்பதை நான் கீப்பர் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்..

அவுட் ஆவதுகூட கொடுமையல்ல.. எங்கள் விக்கெட் விழும்போதெல்லாம், லோக்கல் வர்ணனையாளர் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பார்.. " ஆஹா.. அற்புதமான பந்து.. மட்டையாளர் ஏமாந்துவிட்டார்.. பந்து காப்பாளர் கையில் தஞ்சம் புகுந்தது.. ஆலங்கோட்டை அணியின் புய்ல் வேகப்பந்துவீச்சில் ஹரித்திராநதி அணி 6 விக்கெட் இழந்து பரிதாபமாகத் தடுமாறுகிறது..!" அதைக்கேட்டு பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரித்தது கண்டு நொந்துவிட்டோம்.. 20 ஓவர் மேட்சில், நாங்கள் 7 ஓவருக்கு ஆல் அவுட்.. எங்கள் கணக்கில் 46 ரன்..

அடுத்து எங்கள் தாக்குதல் திட்டத்தை வடிவமைக்கக்கூட நேரம் தராமல், பந்துவீச அழைத்தார்கள்.. "ஆட்டம் முடிந்தபிறகு பரிசளிப்பு விழா நடக்க இருப்பதால் 'ஹரித்திராநதி அணியினர் உடனடியாக வியூகம் அமைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என மைக் முழங்கியது. இத்தனைக்கும் 13 ஓவர் முன்னாலேயே எங்கள் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. மற்ற அணியினர், தண்ணியக் குடி என்று வடிவேலு சொல்வாரே.. அதுபோல எங்களுக்கு தேறுதல் சொல்லி அனுப்பி வைத்தனர்.

எங்களை 46க்குள் சுருட்டிவிட்டாலும், எதிர் அணியினருக்கு எங்கள் பந்துவீச்சின் மீது அபார கிலி இருந்தது. தொடர் முழுதும் எங்கள் துவக்க வீச்சாளர்களின் மிரட்டலை அவர்கள் பார்த்திருப்பார்கள்தானே..? துவக்க ஓவர்களை, வெங்கட சுப்பிரமணியன் (வெங்கிட்டு), ரமேஷ் என்ற இருவர் வீசுவார்கள். இப்போதுபோல பவர்ப்ளே எதுவும் அப்போது இல்லை. ஆளுக்கு 3 ஓவர் வீசிவிட்டு 1 ஓவரை ரிசர்வில் வைத்திருப்பார்கள். அந்த 6 ஓவரிலேயே எதிரணி பாதி காலியாகிவிடும்.

வெங்கிட்டுதான் என் வாழ்வில் நான் அறிந்த முதல் ஆல் ரவுண்டர். தற்போது சென்னை ***** ******ல் பணிபுரிகிறான். நல்ல உயரம். அலறவைக்கும் வேகத்துடனும், அப்பழுக்கில்லா துல்லியத்துடனும் வீசுவான். ஆனால் அவனிடம் ஒரு குறை.. அவன் பந்தில் கிளம்பும் கேட்ச்களை எப்பாடுபட்டாவது பிடித்துவிடவேண்டும். பிடித்துவிட்டால், அடுத்தடுத்த பந்துகளை இன்னும் உற்சாகமாக வீசுவான். நழுவவிட்டால் டென்ஷன் ஆகி, கன்னாபின்னாவென்று வீச ஆரம்பித்துவிடுவான். பேட்டிங்கிலும் சூரப்புலி.. (நாங்கள் 46 எடுத்ததே அவனால்தான்.. ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே விழும் பந்துகளை அள்ளி மிட் விக்கெட்டிலும் கண்ட்ரியிலும் போட்டு அவர்களை வெறுப்பேற்றினான்.) இன்னொரு வீச்சாளர் ரமேஷ், வெங்கிட்டு அளவில் இல்லையாயினும், குட் லெங்த்தில் ஸ்டம்புக்கு நேராக வீசுவான். வெங்கிட்டு பந்தில் அடிக்க முடியாததால், இவன் வீச்சில் அடிக்க முற்படுபவர்கள் ரிஸ்க் ஷாட் ஆடும்போது, விக்கெட் கிடைக்கும். சரி.. விஷயத்துக்கு வருகிறேன்..

வெங்கிட்டு வீசிய முதல் பந்து அட்டகாசமான யார்க்கர்.. மேட்சின் முதல் பந்தை யார்க்கராக வீசுவது அவ்வளவு எளிதல்ல.. மிடில் ஸ்டம்பை அடியில் இருந்து குத்திக் கிளப்பவே, அது கீப்பரைத் துரத்திக்கொண்டு பறந்தது. இந்த விக்கெட் விழுந்த அதிர்ச்சியில் அடுத்த பேட்ஸ்மன் வர நேரமெடுத்தது.. ஆனால் வந்த பேட்ஸ்மனைப் பார்த்து நாங்கள் அதிர்ந்தோம்.. பேட்டை விடச் சற்றே உயரமான ஒருவர்..! அவரை நாங்கள் மற்ற ஆட்டங்களில் பார்த்திருந்தோம். டிஃபென்ஸில் பக்கா.. வாசிம் அக்ரமே வந்து வீசினால்கூட பந்தை அழகாகத் தடுத்து வெறுப்பேற்றக்கூடியவர்.. ஆனால் அவரிடம் ரன் எதிர்பார்க்க முடியாது.. ஒன்றும் இரண்டுமாகப் பொறுக்குவார்..

அவர்கள் திட்டம் புரிந்து போயிற்று..

( ஆட்டம் தொடரும்..)

இப்படித்தான் ட்ரிங்க்ஸ் பிரேக் விட்டுவிட்டார். அடுத்த பதிவாகத் தான் அவரும் அதை வெளியிட்டார் ஆகையால் அண்ணனின் பாதையை பின்பற்றி நானும்.... இதை.. அடுத்த பதிவில் முடிக்கிறேன்...


பட உதவி: http://northpenninegallery.wordpress.com/
-

18 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

களவாணி படத்துல வர்ற ஓபனிங் மாதிரில இருக்கு. கள்ளாட்டம் வேற ஆடிருக்காங்க.

பொன் மாலை பொழுது said...

அம்பி.............................கொஞ்சம் போறா இருக்கு. எப்ப பாத்தாலும் இங்கேயும் இந்த கிரிகெட்ட கட்டிண்டு தான் அழனுமா?
/
/
/
/
அட இன்னா வாஜாரே ................நீயி . நம்ம முண்டக்கன்னி யம்மா கோயிலாண்ட நம்ம பசங்கோ வெல்லாடிகினுகீதுங்கோ போயி பாரு ராசா. அசந்து பூடுவ .ஆக்காங் !!

அத்த வுடு கண்ணு! மன்னாரு குடில நீ மீனு துண்ணியா இல்லியா ? அத்த சொல்லு பா. ..

RVS said...

லிஸ்டுல ஃபர்ஸ்ட் நீங்க தான்.
களவாணி நம்ம ஏரியா பக்கம் எடுத்த படம் தான். ;-)

Anonymous said...

சீக்கிரம் "பிரேக்"க முடிங்க அண்ணா!

RVS said...

@கக்கு - மாணிக்கம்
எதை சொன்னாலும் மதராஸ் பாஷையில் ஒரு தடவை விளாசுவீர்கள். ஆகையால்...
;-) ;-)

RVS said...

@Balaji saravana
விளையாண்டு ரொம்ப களைப்பா இருக்கு. ஒரு அரை நாள் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு போடறேன் தம்பி.. ;-)

Madhavan Srinivasagopalan said...

கொடுக்கப் பட்டுள்ள குறிப்பை (நாடகம்..) பார்க்கும்போது நம் அன்போடு '__' அண்ணேன்னு அழைக்கும், ரெண்டேழுத்துள்ள(தமிழில்) நபர் அவர் என நினைக்கிறேன். அண்ணே.. தொடர்ந்து எழுதுங்க.. 'தொடரும்'= suspense ?

RVS said...

@Madhavan
அவரேதான்!
மேட்டர் கொடுத்துட்டாரு.. கைல இருக்கு அடுத்ததா போடுவோம். எல்லாரும் தொடர் எழுதறாங்க... என் பங்குக்கு... ;-);-)

balutanjore said...

dear rvs

rendu nala bayangara aani
ippodan ellamum padichen
continue writing
(nallathan keedu vadyare)

balu vellore

RVS said...

@balutanjore

O.K Thanks ;-)

பத்மநாபன் said...

மன்னார் குடி மன்னர்கள் கலக்குகிறார்களே..வர்னனைகள் நகைச்சுவை கிளப்பல். ஒரு சேம்பிள் // எங்கள் பேட்ஸ்மன்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துப்போய் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டியிருந்தது.//

RVS said...

நன்றி பத்துஜி ;-)

ஸ்ரீராம். said...

மன்னை மைந்தர்கள் எழுத்துக்கள் எல்லாமே சுவாரஸ்யம்தான்...

RVS said...

நன்றி ஸ்ரீராம் ;-) ;-)

Unknown said...

super cricket commentary sir.......

RVS said...

@padma hari nandan
Thank You ;-) ;-)

முத்து said...

எங்கள் பேட்ஸ்மன்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துப்போய் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டியிருந்தது.///////////

இது தான் உங்க ஸ்டைல் சூப்பர்

RVS said...

@முத்து
அண்ணன் எழுதியது இது.. முத்து.. நானல்ல.... எனினும் பாராட்டுக்கு நன்றி.. ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails