Tuesday, September 15, 2020

மத்யமா செகண்ட் க்ளாஸ்

"தெனம் வெட்டி அரட்டை அடிக்கறத்துக்கு கூடுதலா ஒரு பாஷை கத்துக்கலாமேடா தம்பி.." என்று சாரதா பாட்டி அங்கலாய்ப்போடு கேட்டபோது அது ஒரு வில்லங்கமான கேள்வியாகத் தெரியவில்லை. "ஈ...." என்று முப்பத்திரெண்டும் தெரிய 'மய்யமாக' இளித்துவைத்தேன். வாயைத் திறந்தால் பொறிக்குள் எலியாகச் சிக்கிக்கொள்வோம் என்று தெரியும். ஒன்றிரண்டு நாள்கள் சென்ற பிறகு காலையில் கல்லூரி முடிந்து வந்து மத்தியான்ன போஜனம் ஆகிக்கொண்டிருக்கும் போது சாதத்துக்குக் கெட்டித் தயிர் இரண்டு கரண்டி ஊற்றிய பாட்டி முகத்தருகே குனிந்து கேட்டாள்.


"தம்பி.. தெக்குத் தெருவில ஒரு வாத்யார் ஹிந்தி கத்துத்தரார்... அவரண்ட  வாசியேண்டா... நாளைக்கு வடக்கே போனா பிரயோஜனமா இருக்குமோல்யோ?"

இந்த வேதாளத்தைப் பன்மொழி வித்தகனாக்கும் முயற்சியில் சற்றும் தளராமல் விக்கிரமாதித்த கிழவியாய்க் கேட்டாள். பல்லிடுக்கில் சிரிப்பு தொங்கியது. தலையைத் தூக்காமல் தட்டைப் பார்த்துச் சாப்பிட்டேன். கை அலம்ப எழுந்திருக்கும் போது.....

"பாட்டீ!  காலேஜ் போயிட்டு ரெண்டு மணி மூணு மணிக்குதான் வரேன்.. இதுக்கும் மேலே எங்கே போயி படிக்கிறது? நேரமேயில்லையே..."

"வடகரை மணி டீக்கடை வாசல்ல இறங்குடா.. அப்டியே காலாற நடந்து போனின்னா தெக்குத் தெரு ஹிந்தி வாத்யார் ஆத்துக்குப் போயிடலாமே... ஒரு மணி வாசிச்சுட்டு வந்தியாக்க... சூடா தோசை வார்த்துப் போடறேன்... அப்புறமா நீ ஒன் மட்டையைத் தூக்கிண்டு ஆடக் கிளம்பலாம்..."

என்னுடைய நாளின் முழு ப்ரோக்ராமும் பாட்டி தன் உள்ளங்கையில் வைத்திருந்தாள்.

"ப்ராக்டிகல்ஸ் வரும்... செமஸ்டர் வரும்... அப்போல்லாம் படிக்க முடியாதே... அரைகுறையாயிடுமே..."

மனசுக்குள் பச்சைத் தமிழனாய் ஹிந்தி எதிர்ப்பு அலைமோதியது. அது ஹிந்திக்காக அல்ல. எதை அதிகப்படியாக படிக்கச் சொன்னாலும் பருவ வயது களியாட்டங்களுக்குத் தடையாக இருக்கும் என்பதால் வரும் நொண்டிச் சாக்கு. ஹிந்திக்குள் தலையை விட்டுவிட்டால் ஊர் சுற்ற முடியாது. ஏக் தோ தீன் நினைவுக்குள் வந்து படுத்தி தகிடதகிமி என்று ஆடியது.

"போடா பைத்தாரா... (பயித்தியக்காராவின் பாட்டி பாஷை மரூஉ).. இப்ப மட்டும் எப்பப் பார்த்தாலும் பாட பொஸ்தகம் வாசிச்சிண்டு இருக்கியாக்கும்... எப்போப்பார்த்தாலும் வடக்குத் தெரு மதில்கட்டை... இல்லே மட்டையாடக் கிளம்பிடுவே.. இல்லேன்னா ஸ்நேகிதாளோட ஊர் மேய வேண்டியது... இராப்பகலா பொஸ்தகத்தை கீழே வைக்காம படிக்கிறியாக்கும்... உருப்படியான வேலை பாருடான்னா... சாக்குபோக்கு சொல்லிண்டு திரியறே... வர்ற அமாவாசைலேர்ந்து போ.. நல்ல நாள்.. வெத்தலை பழம் பாக்கு வாங்கிண்டு போய் அவருக்கு வச்சுக்கொடுத்து நமஸ்காரம் பண்ணிட்டு ஹிந்தி வாசிக்கிற வழியைப் பாரு..."

அவ்ளோதான். தீர்ப்பு எழுதிவிட்டாள். வீட்டுக்குள்ளேயே ஹிந்தித் திணிப்பு. பாட்டியைப் பகைத்துக்கொண்டு ஹரித்ராநதியில் காலம் தள்ள முடியாது. அவளது உத்தரவுக்கு கீழ்ப்படியும்வரை தொணதொணவென்று வார்த்தைகளாலேயே சுள்சுள்ளென்று அடிப்பாள். எல்லை தாண்டும் சீனாவே சாரதா பாட்டியின் வாய்க்குப் பயப்படுமளவிற்கு ரேஸர் நாக்கு. கன்னாபின்னாவென்று கண்டிப்பு கறார் பேர்வழி.

தெற்குத் தெரு ரவி வீட்டிற்கு நாலைந்து வீடு தாண்டி ஜைனன் மல்லிகார்ஜுன் இருந்தான். தெற்கு தெருவில் கிரிக்கெட் விளையாடும் நான்கு பேரில் அவனும் ஒருத்தன். "மல்லி... அடுத்த ஓவர் போடு" என்றால், கை வைத்த பனியனோடு வேகப் பந்து வீசுவான். இல்லை. எறிவான். ஏதோ கை கழன்று போவது போல சுழற்றி எறிவான். அவன் வீட்டிலிருந்து ஒரு படித்துறை தாண்டி ஹிந்தி வாத்யார் வீடு.

"ஹிந்தி சார் எத்தனை மணிக்கு இருப்பாரு?" என்று எங்கள் கிழக்குத் தெருவில் படிக்கும் ஏழாம் வகுப்புச் சிறுமியிடம் கேட்டேன்.

"ஹிந்தி சார்னு சொல்லக்கூடாது. அவரை அத்யாபக்னு" கூப்பிடணும் என்று சொல்லிச் சிரித்தது. ஐயகோ! அடிப்படையே தெரியவில்லையே என்று எனக்குப் பக்கென்று இருந்தது. கண்ணாமுழி பிதுங்கி வெளியே விழ ஒரு வழிசல் சிரிப்பை உதிர்த்தேன்.

"காலம்பரலேர்ந்து வீட்லதான் இருப்பாரு... சாயந்திரமா கடைத்தெருவுக்குப் போவாரு" என்று அவரது தினப்படி செயல்திட்டத்தைத் தெரிவித்தது அந்தப் பொடிசு.

வெற்றிலைப் பாக்கு பழம் தட்சிணையுடன் அத்யாபக்கை அவர் வீட்டு திண்ணையில் சந்தித்தேன். நமஸ்காரம் செய்தேன்.  நறுநெய் தடவி மீசை வளர்த்திருப்பார். ஹிந்தி பாரதியார். ஒரு கோணத்தில் ஐயனார் கோயில் வாசலில் இருக்கும் மதுரை வீரன் சிலை மாதிரியே அச்சு அசல் இருப்பார். அதே உயரம். அவருக்கு கண்கள் இரண்டும்  இரண்டு பக்கமும் பார்க்கும் வசதியிருந்தது.

"ம்... அந்த பொஸ்தகத்தை பிரிங்கோ" என்று அவர் சொல்லும்போது வாயிலிருந்து பிரிபிரியாய் வெற்றிலைச் சக்கை சிதறும். திண்ணையில்தான் வகுப்பு. ஏக் காம் மே... ஏக் கிஸான் சொல்லி தலையில் குட்டு வைக்கல்லாம் மாட்டார் என்ற தைரியம் எனக்கிருந்தது. கதரில் V கழுத்து ஜிப்பாவும் அரைக்கு வேஷ்டியும் கட்டியிருப்பார். அவருக்கு திருமணமாகாத ஒரு மகள் இருக்கிறார் என்பது தெருப் பசங்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நிலைவாசல் மரக்கதவு எப்போதும் உள்ளே தாளிடப்பட்டிருக்கும். வகுப்புக்கு கொஞ்சம் முன்னால் போனால் கூட கதவைத் தட்டி திண்ணையில் காத்திருந்தால் வெற்றிலை மென்றுகொண்டே அவர் உருவம் நுழையுமளவிற்கு மட்டும்... அவ்ளோதான்.. தம்மாத்தூண்டு.... கதவைத் திறந்துகொண்டு வந்து ஒரு ஈ கொசு உள்ளே போவதற்குள் பட்டென்று சார்த்திவிடுவார். அந்தக் கதவுக்குப் பின்னால் ஒரு ஜாகை இருக்கிறதென்ற நினைவே உங்களுக்கு எழாது! :-)

ஒருநாள் கல்லூரியிலிருந்து வரும்பொழுதே தாகமாக இருந்தது. ஹிந்தி வகுப்புக்குச் சென்றுவிட்டேன். பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். விக்கல் வருமளவிற்கு தொண்டை வறட்சி. கமறுகிறது. வார்த்தைகள் பிசிறடிக்கின்றன.

"சார்! குடிக்க தண்ணீ வேணும்... தாகமா இருக்கு" என்றேன் தயக்கத்துடன்.

தலையை உள்பக்கம் திருப்பி "நீலு...." என்று ஏதோ தெலுங்கில் சொன்னார். நிமிஷத்திற்குள் ஒரு எவர்சில்வர் சொம்பு மட்டும் கதவிடுக்கில் தெரிந்தது. அந்தரத்தில் தெரிந்த சொம்பை அலேக்காக வாங்கி என்னிடம் கொடுத்து என் தாகம் தணித்தார் ஆசிரியர்பிரான். "ம்... அடுத்த பக்கம்..." என்று பாடம் நடத்துவதற்குள் நுழைந்துவிட்டார்.

இதற்குள் நான் அங்கே ஹிந்தி பயிலச் செல்வது தெப்பக்குளத்தின் நான்கு கரைக்கும் சில விஷமிகளால் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதில் மல்லியின் கை இருக்கும் என்று எனக்கொரு சம்சயம். ஏதோ ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கல்வி படிப்பது போல ஸ்நேகிதச் செல்லங்கள் என்னிடம் விஜாரிப்பதற்கு ஆர்வமாக மொய்த்தார்கள்.

"வெங்குட்டு... அங்கே அவர் வீட்ல ஒரு பொண்ணு இருக்குமேடா" என்று சகஜமாய் தோளில் கைப்போடு ஒருவன் ஆரம்பிக்க மூன்று பேர் சூழ்ந்துகொண்டார்கள். திண்ணை என்ற எல்லை தாண்டாமல் இருக்கும் சௌஜன்யமான பயங்கரவாதி நான் என்னும் விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் ஹிந்தி படிக்கச் செல்வதை விட ஏதோ கணக்குப் பண்ண செல்கிறேன் என்று நினைத்துக்கொண்டார்கள். நான் தண்ணீர் கேட்க ஒரு எவர்சில்வர் சொம்பு அந்தரத்தில் பறந்து வந்த கதையை எப்படி நான் விவரிப்பேன்!? அழுகையை அடக்க வாய்க்குள் தோள் துண்டைத் திணித்து அழும் கருப்பு வெள்ளை படம் சிவாஜி போல திக்பிரமையுடன் நின்றிருந்தேன். தினமும் நான் எழுதிக்கொண்டு வரும் எனது ஹிந்தி நோட்டிலிருந்து அப்போதே ஐம்பதை எட்டியிருந்த என் பவானி சித்திப் படியெடுத்துப் படிப்பாள்.

"படிக்கறத்துக்கு வயசெல்லாம் இடைஞ்சல் கிடையாது... பார்த்தியா... பவானி உங்கிட்டேயிருந்து வாங்கி படிக்கிறா" என்று ஒரு நாள் பாட்டி தனது விசேட குறிப்பை என் தலையில் குட்டுவதைப் போன்று வெளிப்படுத்தினாள். அடுத்தது பாட்டியும் ஹிந்தி படிக்கக் கிளம்பிவிடுவாளோ என்று எனக்குள் உதறல் எடுத்தது.

முதலில் வந்த ப்ராத்மிக் பரீக்ஷை மிகவும் சுலபமாக இருந்தது. எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தால் கேள்வியில் வந்திருக்கும் வார்த்தைகளை இடம் வலமாகவும் வலம் இடமாகவும் மாற்றிப்போட்டு எழுதினால் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று யுக்தி சொல்லிக்கொடுத்தார்கள். என்னால் இயன்ற அளவு கந்தர்கோலமாக jumbled sentence ஆக எழுதினேன். இந்தப் பரீக்ஷையில் தோற்று விட்டால் "கடங்காரனுக்கு அவன் படிப்புதான் வரலேன்னு பார்த்தா ஹிந்தியும் வரலையேடி" என்று பாட்டி ஆற்றாமையில் ஒரு டோஸ் விட்டுவிட்டு "இனிமே இந்த பிரஹஸ்பதிக்காகக் காசை வீணடிக்கவேண்டாம்... இது பேசாம ஊர் சுத்தவே போகட்டும்" என்று ஹிந்தியை நிறுத்திவிடுவாள் என்று மனப்பால் குடித்தேன். ஆனால் தெய்வம் வேறுவிதமாக முடிவெடுத்தது. பிராத்மிக் பரீக்ஷையில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுவிட்டேன் என்று ஹிந்தி வாத்யார் என் தோளில் தட்டாத குறையாக பெருமையாகச் சொன்னார். நான் அப்போதே ஹிந்தி பண்டிட் ஆகிவிட்டது போல பாட்டிக்குப் பரம சந்தோஷம்.

மத்யமா என்ற ஹிந்தியின் ரென்டாம் வகுப்பு தொடங்கியது. அரை மணி ஒரு மணி பாடம் நடக்கும். ப்ராத்மிக்கை விட கொஞ்சம் கஷ்டம். வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஜாலமெல்லாம் காட்டமுடியாது. வாசிக்கும் போதே திணறி... தெருவில் எனக்கு ஹிந்தியில் சீனியர் சிறுமியிடம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். எல்லாம் பாட்டி கழுத்தைப் பிடித்துத் தெருவில் தள்ளியதால் நடந்த விபரீதங்கள். மத்யமாவில் இரண்டாம் இடமே கிடைத்தது. ஆனால் ஹிந்தியில் என்ன எழுதியிருந்தாலும் எழுத்துக்கூட்டிப் படிக்கும் பேராற்றல் வந்துவிட்டது. அலுவலக விஷயமாக புதுடில்லிக்கு நண்பரோடு சென்றிருந்தேன். ஒரு முகவரி தேவடுவதற்காக அலைந்த போது நான் எழுத்துக்கூட்டிப் படித்துச் சரியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். நண்பர் அசந்துவிட்டார்.

"உங்களுக்கு ஹிந்தி சுத்தமா தெரியாதா?" என்று முதலில் அவரிடம் கேட்டறிந்துகொண்டேன். கழுத்து சுளுக்கும்வரை தெரியாது என்று ஆட்டினார். எனக்கு மொழிச் சுதந்திரம் கிடைத்தது போல ஆகிவிட்டது. பின்னர் டில்லியில் இருந்த இரண்டு நாள்களும் தைரியமாக எல்லா பில்போர்டுகள், துண்டுச் சீட்டுகள், லோக்சத்தா தலைப்புச் செய்திகள் என்று ஹிந்தியில் வாசித்துக்காட்டி பிரமாதப்படுத்திவிட்டேன். அங்கேயே ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட ஆஃபீஸ் நண்பர்கள் எதிரே "ஆர்விஎஸ்... ஹிந்தி அபாரமாகப் படிப்பான்" என்று என் தோளைத் தட்டி அந்த நண்பர் ஒரு செய்தித்தாளைக் கொடுத்து படிக்கச் சொன்னபோது என் கண்களில் "தெய்வாதீனமாக" தூசி விழுந்து மறைத்துவிட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டே அமுக்கமாக அறையை விட்டு வெளியேறி விட்டேன். படித்திருந்தால் அந்த அறையில் இருந்தவர்கள் கண்களைக் கசக்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்திருக்கும்.

ரொம்ப வருஷமாக என்னிடம் யாராவது "உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?" என்று கேட்டால் "ஹிந்தி தெரியாது போடா" என்று அதிகப்பிரசங்கித்தனமாக பதில் சொல்லாமல் "மத்யமா செகன்ட் க்ளாஸ்" என்று பெருமையாகக் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வேன். சங்கீதாவும் என் அக்காள் கீர்த்திகாவும் அத்யாபிகாக்கள் என்பதை இந்தச் சமூகத்திற்குத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்! :-)


#மன்னார்குடி_டேஸ்
#ஹிந்தி_ட்யூஷன்
#புது_எபிஸோட்

Sunday, January 5, 2020

கர்மயோகி சாரதா

"தல ஒரேடியா வலிக்கறதுடா..." என்றாள் பவானி சித்தி .
டாக்டர் க்ளினிக்கில் அடியெடுத்து வைத்ததும் கண்களைச் சாய்த்து "இப்போ பரவால்லே போல்ருக்கு...." என்றாள்.
"முன்னாடி அவர் கொடுத்த மாத்திரையெல்லாம் சாப்டியோ"
"ம்.... இப்ப சரியாயிடுத்து.. இனிமே மாத்திரை வேண்டாம்..."
"குணத்துலே அப்படியே பாட்டியை உரிச்சு வச்சுருக்கே...." என்ற எனக்கு என்னுடைய அரைடிராயர் மன்னார்குடி நாட்களும் சாரதா பாட்டியும் கண்ணுக்குள் காட்சிகளாக ஓட ஆரம்பித்தார்கள். பவானி சித்தியை டாக்டர் பரிசோதிப்பதற்குள் எம்பளதுகளின் மன்னையை எட்டிப் பார்ப்போம் வாருங்கள்! 
******* இப்போது sepia modeல் மன்னை **********
"சாயரக்ஷை ஆறரைக்கெல்லாம் வெங்கடாஜலம் வண்டிக்குச் சொல்லுடா.." என்று கோபாலன் திருவிழா இல்லாத காலத்தில் சாரதா பாட்டி என்னிடம் சொன்னால் ஒரு வாரமாகத் தேகத்தோடு மல்லுக்கட்டி பின்னர் இந்த முடிவு எடுத்திருக்கிறாள் என்று அர்த்தம். "சந்திரசேகர் டாக்டராத்துக்குப் போயிட்டு வருவோம்". காலையிலேயே இந்த முடிவு எடுக்கப்படும்.
"வெங்கடாஜலம் ராங்கி பண்ணிக்கிறானே... வேற வண்டி எதாவது வச்சுக்கலாமே" என்று ஒரு முறை பவானி சித்தி சொன்னாள்.
"ச்சே...ச்சே...அவன் அப்பாவிடி...... புள்ளைக்குட்டி கூட கிடையாது... போனாப் போறான்.." என்பாள் பாட்டி இரக்கசுபாவத்தோடு...
ஹரித்ராநதி மேல்கரையின் பின்னால் உள்ள சந்தில் வெங்கடாஜலம் வீடு. நாலாபுறமும் முள்வேலிக்குள் ஒரு அழகான குடிசை வீடு. வாசலில் கறுப்பு நிறத்தில் வயிற்றில் வெள்ளைக் கலரில் திட்டுத் திட்டாய்த் தீவு படங்களோடு காளை புல் மேய்ந்துகொண்டிருக்க பச்சைக் கூண்டு வண்டியின் நுகத்தடி புல்தரையை முத்தமிட்டபடி முன்னால் சாய்ந்திருக்கும்.
"வெங்கடாஜலம்... வெங்கடாஜலம்..." என்று ஒன்றிரண்டு முறைக் கூப்பிட்டால் தலையில் முண்டாசுடன் சுருங்கிய மார்போடு குடிசையிலிருந்து எட்டிப்பார்ப்பார். வாமன ரூபம். அரையில் வேஷ்டிக்கு மேலே குண்டான பச்சை பெல்ட். வெற்றிலைக் குதப்பும் வாய். வலது கண்ணில் பூ விழுந்திருக்கும். உதட்டில் இருவிரல்களைப் பிரித்து வைத்து வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு..
"ம்... எங்க போவணூம்?"
"டாக்டராத்துக்கு... சாயங்காலம் ஆறரைக்கு..."
"ம்... சரி வரேன்..."
வண்டிக்கார வெங்கடாஜலம் வார்த்தைகளை அளந்து மணிரத்ன சுருக்கமாகப் பேசுவார்.
"என்னமோ வரவர உடம்பு சொன்னத்தைக் கேக்கமாட்டேங்கறதுக்கா... டாக்டராத்துக்குப் போயிட்டு வரேன்..." என்று பக்கத்தாத்து ரமா பாட்டியிடம் சொல்லிக்கொண்டு ஆறரைக்கு வண்டி ஏறுவாள். சாரதா பாட்டிக்கு ஆம்பிளைத் துணையாக நானும் பிடித்துக்கொள்ள பவானி சித்தியும் அந்த பியெம்டபிள்யு கணக்காக வந்து நிற்கும் வெங்கடாஜலம் ஒத்தை மாட்டுவண்டியில் ஏறுவோம்.
வெங்கடாஜலம் வண்டியோட்டும் அழகே தனி. வண்டிக்கு ஆக்ஸிலேட்டர் கொடுக்க வேண்டும் என்றால் கையிலிருக்கும் சாட்டையால் நுகத்தடியை இணைக்கும் ஏர்க்காலில் "சொளீர்...சொளீர்" என்று இரண்டு முறை சுழற்றி அடிப்பார். காளை வேகமெடுத்து ஜல்ஜல்லென்று தேரடி தாண்டும். வண்டிக்குள் வைக்கோல் போடப்பட்டு அதன் மேலே உரசாக்கில் தைத்த ஒரு மெத்தை போட்டிருக்கும். அதையெல்லாம் மீறி டிராயருக்குக் கீழே பரப்பியிருக்கும் வைக்கோல் சுருக் என்று தொடையில் குத்துவது அக்குபஞ்சரில் எந்த வியாதிக்கு என்று விவரிக்க இயலாத அனுபவம்.
"வெங்கடாஜலம்... மாட்டு வண்டி குதிர வண்டியாப் போறதே... மொள்ளமாவே போவேமே... டாக்டர் அங்கேயேதான் இருப்பார்...."
பாட்டியின் இந்த வார்த்தைக்கு வெங்கடாஜலத்தின் கட்டளைக்கு முன்னரே மாடு கட்டுப்படும். "ஹோ..ஹோ...ஹோய்..." என்று வெங்கடாஜலம் ராகமிழுத்து கயிற்றை இழுக்கும்போது மூன்றாம் தெருவில் சோமேஸ்வரய்யா வைத்தியசாலை என்ற பேருந்து நிறுத்தம் எதிரிலிருக்கும் சந்திரசேகர் டாக்டராத்துக்கு வந்திருப்போம். சோமேஸ்வரய்யா, டாக்டரின் அப்பா. மிகவும் பிரசித்தமான மருத்துவர்.
சீனு மாமாதான் கம்பௌன்டர். நெற்றியில் ஸ்ரீசூர்ணமும் அரைக்கை சட்டை வேஷ்டி. வெந்நீர் உலைகொதிப்பது போல தளபுளக்கும் பாத்திரத்தில் இஞ்செக்ஷன் சிரிஞ்சிகளை சுத்தப்படுத்த போட்டிருந்து உள்ளேயிருந்து "ட்ட்ரிரிரிங்க்" என்ற பஸ்ஸருக்கு ஒரு சிரிஞ்சை கிடுக்கியில் எடுத்துக்கொண்டு டாக்டர் அறைக்குள் செல்லும் சீனு மாமாவிடம்....
"சீனு.... நாங்க எப்போ?" என்று கேட்பாள் சாரதா பாட்டி. பக்கத்தில் கூத்தாநல்லூரிலிருந்து புர்க்கா அணிந்தவர்கள் சென்ட் வாசனைத் தூக்க அமர்ந்திருப்பார்கள்.
"பாட்டீ.... இப்போதானே வந்தேள்... உங்களை நாங்கெல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சே.... பேசிண்டிருப்போமே..." என்பார்.
கதவு திறந்து மூடும் போது டாக்டர் பாட்டியைப் பார்த்துவிட்டால் பாட்டியின் தள்ளாத வயதினால் சீனு மாமாவிடம் பாட்டியை உடனே உள்ளே அனுப்பும்படி சொல்லிவிடுவார்.
"வாங்கோ... எப்படியிருக்கேள்?"
"உடம்பு சொன்ன பேச்ச கேட்கமாட்டேங்கிறது.. அதான் உங்களாண்ட காமிச்சுட்டுப்போகலாம்னு வந்தேன்"
"ஜுரம் இருந்தா குளிக்காதீங்கோம்பேன்.... நீங்க போய் ஹரித்ராநதியில ஸ்நானம் பண்ணுவேள்.... ரசம் சாதமா சாப்பிடுங்கோம்பேன்... நீங்க மோரூத்தி சாப்பிடுவேள்"
பாட்டியின் சொல்பேச்சுக் கேளாமையை வரிசையாக டாக்டர் அடுக்குவார். டாக்டரின் பெரிய பையன் பாலாஜியும் நானும் வகுப்புத் தோழர்கள். சின்னவன் ராம்ஜி எங்களுக்கு ஒரு க்ளாஸ் குறைச்சல்.
"டாக்டர், ஹரித்ராநதியில ஸ்நானம் பண்ணலைன்னா எனக்கென்னமோ பண்றது... அதுக்கு ஜுரம் பரவாயில்லை போல்ருக்கே"
"நீங்க நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேள். இருந்தாலும் இப்படி வந்து என்னைப் பார்த்துட்டுப் போறேள்" என்று நமுட்டாகச் சிரிப்பார் டாக்டர். சந்திரசேகர்.
"வைத்தியனுக்குன்னு இவ்ளோ கொடுக்கணும். அப்போதான் உடம்பு சரியாகும்...." என்பாள் பாட்டி பதிலுக்கு.
அரைமணியில் வெளியே வந்தால் மாட்டைக் கட்டிப்போட்டுவிட்டு வெங்கடாஜலம் பக்கத்தில் நாலாம் தெரு போகும் முனையில் உட்கார்ந்திருப்பார். பெரியாஸ்பத்திரி பக்கத்தில் சீனிவாசா மெடிக்கலில்தான் சீட்டுக்கு மருந்து வாங்குவோம்.
"தம்பீ! டாக்டர் ரெண்டு எழுதினா ஒண்ணு வாங்கு... ஒண்ணு எழுதினா அரை வாங்கு..."
"டாக்டர் கேட்கறது சரிதான்.. அப்புறம் ஏன் டாக்டராத்துக்கு வரே" என்பாள் பவானி சித்தி.
"நாளைக்கு ஒரு சொம்புப் பாலை ஹரித்ராநதி தாயாருக்கு வுட்டுட்டு ஸ்நானம் பண்ணிட்டேன்னா.... எல்லாம் சரியாயியிடும்... விருந்தும் மருந்தும் மூணு நாள்டா"
ஓடிப்போய் மருந்துவாங்கிக்கொண்டு வண்டியில் தாவி ஏறிக்கொள்வேன். சவாரி முடியும் வேளை வந்துவிட்டதால் மாடு துள்ளியோடும். அன்னவாசல் தெரு தாண்டி கற்பகம் ஸ்டோர்ஸ் தாண்டி கிழக்குத் தெரு மூலையில் மாட்டுவண்டி நுழையும் போதே பாட்டி.....
"பவானீ.... வண்டிச்சத்தம் கொடுத்துடுடீ..." என்பாள்.
எட்டு எட்டரைக்கே ஊர் அடங்கிவிடும். ஹரித்ராநதியும் சலனமேயில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும். சோழன் போக்குவரத்துக்கழக பஸ் அரசு பஸ் என்பதின் அனைத்து இலக்கணங்களையும் ஒத்து டகடகடக என்று மொத்த பாடியும் கழன்று விழும் அபாயத்தில் கடகடக்க... அழுது வடியும் விளக்குகள் உள்ளே எரிய ஒன்றிரண்டு பயணிகள் ஜன்னலில் தலைசாய்த்து தூங்கியபடி பஸ்ஸ்டாண்ட் செல்வார்கள்.
வெங்கடாஜலம் வண்டியிலிருந்து இறங்கியவுடன் எதிரே தெரியும் ஹரித்ராநதிக்கு இருகைக்கூப்பி வணக்கம் சொல்வாள்.
"வெங்கடாஜலம்... பார்த்துப் போப்பா..." என்று அவருக்கு அவள் பாணியில் ஒரு பை சொல்லிவிட்டு கூன் விழுந்த முதுகோடு படியேறி கைகால் அலம்பிவிட்டு வழக்கமான பாய் போட்டுக்கொள்ளாமல் காலையில் துவைக்க வைத்திருக்கும் எதாவது விழுப்பு புடைவையை கீழே போட்டுத் தரையில் படுத்துக்கொள்வாள்.
டாக்டர் சொன்னது போல காலையில் எழுந்து ஹரித்ராநதியை பிரதக்ஷிணம் செய்துவிட்டு கீழ்கரை மங்கம்மா படித்துறையில் இறங்கி ஸ்நானம் செய்துவிட்டு ஈரப்புடவையை சுற்றிக்கொண்டு ராத்திரி தரையில் போட்டுப் படுத்த புடவையை துவைத்துத் தோளில் போட்டுக்கொண்டுக் கரையேறிக்கொண்டிருப்பாள்.
"பிரதக்ஷிணம் வர்றச்சே மேல்கரையில பார்த்துட்டு... திரும்ப எப்போ பாட்டீ போகலாம்ன்னு வெங்கடாஜலம் கேட்கறாண்டா...." என்று பொக்கை வாய் தெரிய சிரிக்கும் சாரதா பாட்டியை நான் கர்மயோகியாகத்தான் பார்த்திருக்கிறேன்.

Monday, December 30, 2019

தாவணி போட்ட தீபாவளி

சின்னப் பசங்களாக இருக்கும் வரையில் வெடி கொளுத்தி குஜாலான மனசு வாலிபம் தலைப்பட புத்தாடையில் குஜிலிகளைக் காணும் ஆசை அரும்புமீசையோடு சேர்த்துத் துளிர்விட்டது. கன்னியரின் மனசைத் தெரிந்துகொள்ளாத கபோதிகள் சிலர் வெங்காய வெடியைக் கையில் கொண்டு போய் சாலையில் மெல்ல நடந்து செல்லும் பாவாடைத் தாவணிகளின் காலருகே அடிப்பார்கள். தீவிரவாதிகள். அப்போது திடுக்கிட்டு நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு மான் போல மிரளும் குட்டிகளைக் கண்டு சிரித்துக்கொண்டே சைக்கிளில் இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரிலிருந்து எடுத்து அகலவிரித்து ஹீரோயிஸம் காட்டி மகிழ்வார்கள். அது உண்மையில் வில்லத்தனம் என்று அந்த அறிவிலிகளுக்குத் தெரியாது. இந்தப் பூர்வ பீடிகையின் பின்னே சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. சொல்கிறேன்.
மன்னை ஹரித்ராநதியின் கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என்று பிரதக்ஷிணமாக வரும் தெருக்களில் சக ஸ்நேகிதர்கள் யாரையெல்லாம் சைட் அடித்துச் சுற்றுகிறார்களோ அந்த மங்கல பெண்டிர் தீபாவளிக்கு என்ன கலர் ட்ரெஸ் போடுவார்கள் (தாவணியோ பாவாடையோ) என்பதை முட்டை மந்திரிக்காமல் தெரிந்து கொண்டு அதே கலருக்கு மேட்ச்சிங்காக சட்டை பேண்டு போட்டு அன்று அவள் முன்னால் உலாத்துபவன், நேரம் கனிந்து வரும்போது அப்பெண்ணின் மணவாளனாகிவிடுவான் என்ற கிறுக்குத்தனம் கலந்த மூட நம்பிக்கை ஒரு தீபாவளியில் உதயமானது.
அந்த தீபாவளியில் டெய்லர்கள் எல்லாம் படு பிசி. ஸ்டைலோ மணி உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் ஆஸ்தானம். என் அப்பா ஒரு பண்டில் கதர் துணி வாங்கிக்கொடுத்தால்... பத்து பதினைந்து சட்டைகளாக தைத்துக் கொடுப்பார் மணி. குரலில் கொஞ்சம் நளினமாக பெண்கள் சாயலில் இருந்தாலும் ஆண்களுக்கான முதல்தர டெய்லர். அடுத்ததாக சூப்பர்ஃபைன் டைலர் என்னுடன் பள்ளியில் படித்த ஸ்நேகிதனின் அப்பா. பந்தலடியில் இந்தப் பக்கம் கலா ஒயின்ஸ் எதிர்புறம் ஸ்டைலோ. அந்தப் பக்கம் உடுப்பி கிருஷ்ணபவன் எதிரில் சூப்பர்ஃபைன். இளைஞர்களின் அந்தக்கால விருப்பமாக சூப்பர்ஃபைனும் சாந்தி தியேட்டர் எதிர்புறம் இருக்கும் மாரீஸ் டைலர்ஸும் ஆடைப்புரட்சி நடத்தி கோலோச்சிக்கொண்டிருந்தார்கள்.
மாரீஸ் டைலர்ஸ் அண்ணன் தம்பி மூன்று பேர். 2 அண்ணன் ஒரு தம்பி. ஒரு அண்ணனுக்கு இரண்டு தம்பி. சரி இப்போது அந்த சர்ச்சை வேண்டாம். அங்கே சட்டை பேண்ட் தைத்த கதைக்கு வருவோம். அந்த வருஷம் சத்தியராஜ் "பூ விழி வாசலிலே" படத்தில் கொசுவலை போல உள்ள துணியை சும்மா கை வைத்துத் தைத்து ஃப்ரீ சைஸில் சட்டை மாட்டிக்கொண்டு "அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே?" என்ற பாடலுக்கு திரையில் ஆடியாடி நடந்து வந்ததைப் பார்த்து இளைஞர் உலகமே அதே சட்டையை (சத்யராஜ் கொடுப்பாரா? கொடுத்தால் எவ்வளவு பேருக்குக் கொடுப்பார்?  ) ..ச்சே... அந்த சட்டை மாதிரியே போட்டுக்கொண்டு கன்னியரை அசத்தத் துடித்தார்கள். அதே போல துணியை வாங்கும் முயற்சியில் அனைவரும் இறங்க ஆபத்பாந்தவனாக வந்தவன் புவனேந்திரன். "நண்பேன்டா" புவனேந்திரன் கம்மாளத் தெரு நாகோடா டெக்ஸ்டைல்ஸில் பகுதிநேர ஊழியன். தானுண்டு கடையுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு உத்தமன்.
அவரவருக்கு என்ன கலரில் அந்த கொசுவலைத் துணி வேண்டும் என்பதில்தான் இந்த வியாசத்தின் இரண்டாம் பாரா சங்கதி அடங்கியிருக்கிறது. தெற்குத் தெருவில் அழகான அக்கா தங்கை இருந்தார்கள். ஆமாம். இருவருமே அழகிகள். சிலசமயம் அக்கா நன்றாக இருந்தால் தங்கை இராவணனின் தங்கை போலவும்; தங்கை பார்க்க லக்ஷணமாக இருந்தால் அக்கா ஜ்யேஷ்டாதேவி போலவும் இருப்பது பொது மரபு. இங்கே இருவருமே அற்புதமான சைட். அப்படி "சைட்" என்றுத்தான் சைத்தான்கள் பேசிக்கொள்வார்கள். அக்காவைச் சிலரும் தங்கையைச் சிலரும் பின்தொடர்ந்தார்கள். இந்த ஃபேஸ்புக் போன்று ஃபாலோயர்களைக் கணக்கிடும் காலமாக இருந்தால் மன்னை மக்கள்தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவும் அவர்கள் பின்னாடிதான். சரி. இதற்கு மேல் டீட்டெயிலிங் தேவையில்லை. நிறுத்துவோம். இவ்வியாசத்தில் இங்கிருந்து அக்கா என்றால் மேற்படி 'அழகிய' அக்காவும் தங்கை என்றால் மேற்கண்ட 'லவ்லி' தங்கையுமாக வாசகர்கள் படித்துக்கொள்ளவும்.
அந்த அக்காவின் உடை என்ன கலராக இருக்கும் என்ற யூகத்தில் சிலரும் தங்கையைப் பின்பற்றுபவர்கள் வேறு யூகத்திலும் துணியெடுக்கப் படையெடுத்தார்கள். அக்கா கலருக்குப் போட்டியிட்டவர்கள் சிகப்பு மஞ்சள் பச்சையென்று வண்ணமயமான கற்பனையில் துணியெடுத்துக்கொண்டார்கள். தங்கையின் அபிமானியாக இருந்தவன் ஆப்தன் ஸ்ரீராம். ஸ்ரீராமுக்கு தங்கையின் தாவணி நிச்சயம் நீலம்தான் என்று ஏதோ ஒரு பட்சி சொல்லியது. நீலக்கலரில் சொக்காயும் அதற்கேறவாறு அன்ட்ராயரும் தைத்துக்கொள்ளமுடிவு செய்தான்.
மாரீஸுக்கு தீபாவளி ஆர்டர்கள் மலைபோலக் குவிந்தது. மாரீஸில் அண்ணன் வெட்டித் தர ஒரு தம்பி மூட்டிக்கொடுக்க இன்னொருத்தர் காஜா. அசுரத்தனமாக அனைவரும் ஒரு மாதகாலமாக வேலைப்பார்த்ததில் கைவேறு காலர்வேறாக தைத்துவிடுவார்களோ என்றஞ்சி துணி கொடுத்தவனே அருகில் இருந்து கண்காணிக்கும்பணியில் ஈடுபடவேண்டியதாயிற்று. அடியேனின் கொசுவலை தீபாவளிக்கு ஒரு நாள் முன்னரே தயாராகியது அடியேன் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியம். தீபாவளி அதிகாலையில் "ஒரு பொதை வெய்யேன்டா தம்பி" என்று பாட்டிச் சொல்லைத் தட்டாமல் புஸ்வானம் வெடிக்கும் போது சரவணன் மாரீஸிடமிருந்து புதுச்சட்டை பேண்ட் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான்.
கங்கா ஸ்நானம் ஆனபின் எல்லோரும் புதுத்துணி அணிந்துகொண்டாயிற்று. இப்போது துணி தைத்துக்கொண்டதின் புண்ணிய பலனாக அக்கா-தங்கைகளின் ஆடை நிறம் பார்க்க ரோமியோக்கள் தயாரானார்கள். சைக்கிள்தான் அப்போது எங்கள் ஹார்லே டேவிட்சன். ஐயனார் கோயில் திருவிழாவில் இரவு முழுவதும் பல்பு கட்டி இறங்காமல் சுற்றும் சாகசக்காரன் போல அதிகாலையிலிருந்து நாலுவீதியையும் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஏழு மணி போல ஒருவழியாக அழகிகள் தரிசனம் ஆனது. அக்காக்காரர்கள் எல்லோருக்கும் ஏமாற்றம். பச்சை மஞ்சள் சிகப்பு என்று தெலுங்கு ஹீரோக்கள் போல கண்ணைப்பறிக்கும் கலரில் ஸ்டைலாக துணிபோட்டிருந்தவர்கள் முகத்தில் ப்ரௌனைப் பூசி விட்டாள் அக்கா. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள். இதுபோன்ற 'லவ்'கீக சமாசாரங்களில் ஸ்ரீராமின் குறிகள் என்றுமே தப்பியதில்லை. அத்தங்கையும் நீலம். ஸ்ரீராமும் நீலம். அன்று வானமும் நீலம். வானத்தின் வண்ணத்தை வாங்கிக்கொண்ட ஹரித்ராநதியும் நீலமாக இருந்தது. Blue Everywhere!
ஸ்ரீராமுக்கு ஒரே குதூகலம். அவன் நோட்டமிட்டவளும் அவனும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்ட சந்தோஷத்தை விட அந்த அக்காக்காரியை பின்தொடரும் பிரகஸ்பதிகள் அசடுவழிய ஏமாற்றம் அடைந்ததில் அலாதியான ஆனந்தம் அடைந்தான். தாவணி போட்ட தீபாவளிகள் என்றுமே அழகு என்ற கிளிஷேவுடன் இதை முடித்துக்கொள்கிறேன். 
~~~~~~
எல்லோருக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
~~~~~~~
பொறுப்புத் துறப்பு: நான் இந்த செயலில் ஈடுபடவில்லை எனவும் வெகுகாலத்திற்குப் பின்னர் இப்படியெல்லாம் கலரில் விளையாட்டு நடந்தது எனவும் ஸ்ரீராம் சொன்னதை கிளுகிளுப்பாக இருக்கட்டும் என்று சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இங்கே இவ்வியாசம் எழுதப்பட்டது. நன்றி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails